Sunday 20 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்


                                                                பேயாழ்வார்

திருமயிலையில் வைஷ்ணவக் கோயில்கள் பல இருந்தாலும் ஸ்ரீ ஆதிக்கேசவ பெருமாள் கோவில் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த கோவிலின் அருகில் திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டு இருந்தது. அந்த கிணற்றின் தண்ணீர் தேங்கிய நீர் போல மிகச் சுவையை பெற்றிருந்தது. அந்த கிணற்றின் அமைப்பும் தண்ணீரின் சுவையும் அனைவரையும் இன்பத்தில் மூழ்க வைத்தது. அதில் எப்போதும் தண்ணீர் மேல் மட்டம் வரைக்கும் வற்றாமல் சிறப்பு தன்மையோடு இருந்தது. அப்படி தெய்வீகத்  தன்மையுடைய அந்த கிணற்றில் அதுவரைக்கும் யாருமே பார்த்திராத வண்ணம் புதுமையான பூவொன்று பூத்தது. அதை செவ்வல்லி என்று அழைப்பார்கள்.

சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறை தசமி திதி, வியாழக்கிழமை சதய நக்ஷத்திரத்தில் கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான நரந்தகம் என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசோடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த க்ஷணமே புன்முறுவல் பூத்த அந்த குழந்தையை சுற்றி பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பிறள ஆரம்பித்தது. நெகிழ வைக்கும் தமிழ் பாசுரங்களை நினைத்த நேரத்தில் பாடி வியக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணனுமாய் எம்பெருமான் நாமத்தை ஜபிக்க தொடங்கியது. எந்த பருவத்திலும் எம்பெருமானை பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இப்படி பித்தனாக வாழ்கிறானே என்று அவரை பேயன் என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரை பேயாழ்வார் என்று போற்றிக் கொண்டாடினர்.

கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார். நீதி நூல்கள், அறநூல்கள், மதநூல்கள், பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார். நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார். அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.

பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.  பேயாழ்வார் தொண்டை மண்டலத்து க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார். தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார். இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார். திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.  எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.

நிற்க: முதலாழ்வார்கள் மூவரின் சரித்திரத்தை தனித்தனியே பார்த்தோம். மூவரும் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ஆசிரமம் நோக்கி வந்த வரையில் பகிர்ந்து கொண்டோம். இனி மூவரும் சேர்ந்து என்னென்ன கைங்கர்யங்கள் புரிந்தனர் என்பதை பகிர்ந்து கொள்வோம்.

No comments:

Post a Comment