Monday 25 June 2012

நம்மாழ்வார் வைபவம் - 1


கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருகுருகூரில் 'காரி' என்பவருக்கு குமாரராய் 'சேனைமுதலியார்' எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாய் அவதரித்த சடகோப்பரை உபாஸிக்கிறேன்.

கலியுகத்தின் முதல் வருஷத்தில், வைகாசி விசாகத்தில், உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் விஷ்ணு பக்தியை நிலை நிறுத்துவதற்காகசேனை முதலியாரின் அம்சமாக, அவருடைய அருளினால் த்வயம் என்னும் திவ்யமந்திரத்தை உபதேசிக்க பெற்றவரும், திராவிட வேதத்தை அருளியவருமான சடகோப முனிவரை தியானிக்கிறேன்.

வேதத்தின் உத்திர காண்டமாகிய உபநிஷத்தைத் தமிழ் மொழியில் வெளியிட்ட உலகுக்கெல்லாம் அலங்காரபூதராய், மகிழ்மாலை மார்பினரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

கலியுகத்தில் பிரமாதி என்ற முதல் வருடத்தில், வைகாசி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் விசாக நக்ஷத்திரத்தில், சுக்லபக்ஷம் சதுர்தசியுடன் கூடிய அழகிய கடகலக்னத்தில், 'ஸ்ரீவிஜ்ஞாந' என்னும் எழுத்துக்களால் ஏற்படும் நாற்பத்திரண்டு தினங்கள் சென்றபின் 'லாப' என்னும் எழுத்துக்களால் கிடைக்கும் நாற்பத்து மூன்றாவது கலித்தினத்தில், வஸந்தருதுவில்நம்மை போன்றவர்களின் நல்வினைப்பயனாக மற்ற ஆழ்வார்களை அவயங்களாக கொண்டவரும், ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான பராங்குசர் அவதரித்தார்.

பாண்டிய நாட்டில் தாமிரபரணிக் கரையில் உள்ள திருக்குருகூரில் வேளாள வருணத்தில் எம்பெருமானுக்கே தொண்டு புரிந்து வரும் குலத்தில் பிறந்த திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் வாழ்ந்து வந்தார். அவர் குமாரர் அறந்தாங்கியார் என்பவர். அவர் பிள்ளை சக்ரபாணியார். அவர் பிள்ளை அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரை கண்ணர். அவர் குமாரர் செங்கண்ணர். அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரர் தான் 'மாறன்' என்றும், 'சடகோபன்' என்றும், 'பராங்குசன்' என்றும் பேர் பெற்றவரான உலகுய்ய வந்து அவதரித்தவர் நம்மாழ்வார்.

பொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்கு திருமணம் செய்ய எண்ணி, மலைநாட்டில் 'திருவண்பரிசாரம்' என்னும் திருப்பதியில் உள்ள 'திருவாழ்மார்பர்' என்னும் திருமாலடியவருடைய குமாரத்தியான 'உடையநங்கை' என்பவருக்கு மணம் பேசி முடித்து, விவாஹ மஹோத்ஸவத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்.

காரியார் தன் மனைவி உடையநங்கை எனும் குணவதியோடு இல்லற வாழ்க்கையில் இருந்தபடி எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது ஈகை பல செய்து வந்தார். தன் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை இவர்களை வாட்டி எடுத்தது. ஒரு முறை இவர் தன் மனைவியுடன் தன் மாமனாரின் ஊர் சென்று திரும்பும் வழியில் திருக்குறுங்குடி என்னும் ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பி எம்பெருமானை சேவித்து தன் மனக்குறையைக் கண்ணீர் சிந்தி முறை இட்டார். இருவரும் கண்ணீர் சொரிந்தபடி வேண்டியவாறே கண்ணுறங்கினர். தன்னை நம்பி வாழும் பக்தர்களுக்கு அனைத்தையும் தந்துதவும் மாலவன் அன்றிரவு இருவர் கனவிலும் தோன்றி "நீங்கள் நற்கதியடையும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் என் அம்சமே அருஞ்செல்வனாகத் தோன்றும். வருத்தம் நீங்குவீராக" என்று கூறி மறைந்தார்.

விடிந்ததும் மிக ஆனந்தத்தோடு இறைவனை வணங்கி மாலை ப்ரஸாதங்களை பெற்றுக் கொண்டு திருகுருகூருக்கு எழுந்தருளி வாழ்த்து வருகையில் உடையநங்கையார் கருத்தரிக்க, எம்பெருமான் பாரெல்லாம் உய்யும்படி சேனை முதலியாரை நம்மாழ்வாராக அவதரிக்கும்படி நியமிக்க, மேலே கூறியபடி கலி பிறந்த நாற்பத்து மூன்றாவது நாளில் கலித்தோஷத்தை அகற்றுவதற்காக விஷ்வக்சேனரின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தருளினார். இப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாகவும், சேனைமுதலியாருடைய அம்சமாகவும் ஆழ்வார் அவதரிப்பதற்கு முன்பே "சென்றால் குடையாம்" என்ற ரீதியில், திருவநந்தாழ்வான் என்பவர் இவர் மீது மழை வெய்யில் முதலியன படாமல் ரக்ஷிப்பதற்காக திருகுருகூரில் ஒரு புளியமரமாக அவதரித்து வளர்ந்திருந்தான்.

நம்மாழ்வார் பிறந்த மாத்திரத்திலேயே ஞானமும் பிறந்தது. குழந்தை பிறந்த அன்று தொடங்கி அழுவது, தாய்ப்பால் உண்பது முதலிய உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமல் இருந்த போதிலும் பகவதனுபவத்தாலே எந்த வாட்டமும் இல்லாது வளர்ந்து வந்தார். அவ்வதிசயத்தை கண்ட பெற்றோர் எம்பெருமான் மீது பாரத்தை போட்டு, பிறந்த பன்னிரெண்டாம் திருநாள் அன்று திருகுறுகூரில் எழுந்தருளியிருக்கும்  பொலிந்து நின்ற பிரான் சன்னதிக்கு குழந்தையை எடுத்துக் சென்று, பிரானை சேவிக்கப்பண்ணி வைத்து, அப்பெருமான் திருமுன்பே பக்தி மயக்கத்திலே இருக்கும் அந்த தெய்வக்குழந்தைக்கு, உலக நடைக்கு மாறாக இருந்ததினால் 'மாறன்' என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். தத்தி விளையாட வேண்டிய குழந்தை பெருமானையே சுற்றிச்சுற்றி வந்தது கண்டு பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அக்குழந்தை அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து அசைவற்று ஐம்புலன் அடக்கம் பூண்டது. அங்கேயே கண் விழிக்காமலும் வாய் திறந்து பேசாமலும் எதையும் உண்ணாமலும் மௌனமாகவே பதினாறு ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்தது.

எம்பெருமான் சேனைமுதலியாரை அனுப்பி, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்க செய்து மயர்வற மதிநலம் அருளினான். கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தைகளின் அறிவை மறைக்கும் சடவாயுவை - பிறக்கும்போதே தம்மை மேலிடாதபடி ஹூங் காரத்தாலே ஓட்டியவராகையால் இவருக்கு 'சடகோபர்' என்றும், திருவுள்ளம் உகந்து பொலிந்து நின்ற பிரான் ப்ரஸாதித்தருளிய மகிழ்மாலையை தரித்ததினால் 'நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்' என்றும் 'மகிழ்மாலை மார்பினர்' என்றும் 'வகுளாபரணர்' என்றும் திருநாமங்கள் பெற்றார்.