திருமழிசை ஆழ்வார்,
பேயாழ்வாரின் பேரருளோடு ஒரு நாள் திருவேங்கட
கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள திருவல்லிக்கேணி என்னும் திருநகரை அடைந்தார். அங்கு
தங்கியிருந்து தினமும் அல்லிக்குளத்தில் நீராடி மூலமூர்த்தியான பார்த்தசாரதியையும்
சேவித்து சிந்தை மகிழ்ந்தார். அதன் பிறகு அங்கேயே அவர் நிஷ்டையில்
ஆழ்ந்திருந்தார்.
ஒரு நாள் ருஷப வாகனத்தில்
பார்வதியும் சிவனும் ஆகாய மார்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். பார்வதி இவருடைய
தேஜசைப் கண்டு வியப்புற்று, "இவர் யார்" என வினவ,
சிவபிரான், "இம்மஹானுபாவர் நம் அடிமையாய் இருந்து இப்போது நாராயணனுக்கு
அடிமைப்பட்டு இருப்பவர்" என்று சொன்னவுடன் உமாதேவி, "அத்தகைய பெரியவருக்கு நாமும் காட்சி தந்து
ஏதாவது வரம் அளித்து விட்டு செல்வோம்" என்று கூற, அவள் விருப்பப்படி திருமழிசைப்பிரான் முன் தோன்றினார்.
ஆனால் திருமழிசை ஆழ்வார் அவரை பார்க்காதது போல் ஒரு கந்தைத் துணியைத் தைத்து கொண்டிருந்தார்.
இருப்பினும் தன் வரவு வீணாகக் கூடாது என்றெண்ணிய சிவபிரான், "நீ விரும்பிய வரத்தை பெற்று வாழ்வாய்"
என்று நிர்ப்பந்தமாக கேட்க, அது கேட்ட ஆழ்வார்,
"மோக்ஷலோகமான பரமபதத்தை
அருளவல்லீராகில் அருள்வீர்" என்றார். அதற்கு மஹாதேவர், "அது நம்மால் இயலாது, அதை தரவல்லவன் முகுந்தன் ஒருவனே. அது தவிர வேறு வரம்
கேள்" என்று கூற, திருமழிசை ஆழ்வார்
புன்முறுவல் செய்து, "அந்த முக்தியை பெறுவதற்கு
ஸாதனங்களை அனுஷ்டிப்பதற்கு உறுப்பாக நீண்ட ஆயுளையேனும் எனக்கு
தரவேண்டும்" என்று கேட்க அதற்கு
கைலாசநாதர், " அது கர்மானுக் குணமாக
ஏற்கனவே வரம்புக் கட்டப்பட்டுவிட்டது. அதை வளரச் செய்ய என்னால் ஆகாது. வேறு வரம்
வேண்டுவாய்" என்று வினவ திருமழிசைபிரான் இகழ்ச்சி தோன்ற நகைத்தார். அது கண்ட
சிவபிரான் சினம்கொண்டு, "செருக்குடைய உன்னை
இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்" என்று கூறி நெற்றிக்கண்ணைத் திறந்து விட,
அதிலிருந்து ஊழிக்கால நெருப்புப் போலே அக்னி
கிளர்ந்து எழுந்தது. அது கண்ட திருமழிசை பிரான், "இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும்
அஞ்சுவேனல்லன்" என்று சொல்லித் தமது வலத்திருவடியில் பெருவிரலில் உள்ளதொரு
கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஒரு பெரும்
தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பலமடங்கு பெரியதாகி, நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பாய் அடக்கி,
முக்கண்ணனையும் சுடத் தொடங்கிற்று. அது கண்ட
சிவபிரான் அதிலிருந்து தப்பிக்க தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக்
காலத்திற்போலே மழை பொழியும் படி நியமித்தார். அவ்வண்ணமே அம்மேகங்களும் மழை
பொழிந்ததனால் பெருவெள்ளம் ஏற்படவும், பரம பாகவதரான திருமழிசை ஆழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை த்யானித்துக்
கொண்டு வீற்றிருந்தார். அதை கண்டு சிவபிரான் ஆழ்வாருக்கு, "பக்திஸாரர்" என்று நாமம் சூட்டி அவரை
மிகக் கொண்டாடி கைலாயம் சேர்ந்தார்.
அதற்குப்பின் ஆழ்வார்
முன்போலவே யோகத்தில் எழுந்திருக்கையில், அஷ்டமாசித்தி பெற்ற சுத்திஹாரன் என்னும் சித்தன் புலி மீது அமர்ந்து விண்வழியே
வந்து கொண்டு இருந்தான். நிஷ்டையிலிருந்த திருமழிசை ஆழ்வாருக்கு மேற்கு புறமாக
அந்த சித்தன் சென்ற போது புலியின் வேகம் தடைப்பட்டது. ஒன்றும் புரியாது
திகைத்துப்போய் கீழே பார்த்தான் அந்த சித்தன்.
அல்லிக்குளத்தருகே பெரும் ஜோதி ஒன்று தெரிய பூமிக்கு இறங்கினான் சித்தன்.
ஞானத்தவமிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் நிஷ்டாகினியின் ஒளியே அந்த ஜோதி என்பதையும்
அதுவே தனது புலியின் ஓட்டத்தை தடுத்தது என்பதையும் புரிந்துக் கொண்டான். கந்தல்
ஆடையுடன் தவத்திலிருந்த ஆழ்வாரிடம் ஒரு பட்டுத்துணியை வரவழைத்து, "இதோ இந்த பட்டாடையை உடுத்திக் கொண்டு உம்
கந்தலாடையை தூக்கி எறியும்" என்றான் அவன்.
அவனுடைய சித்த வேலைகளை புரிந்து கொண்ட ஆழ்வார் தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே
மாணிக்கமயமானதொரு கவசத்தை உண்டாக்கி அவனிடம் கட்டினார். சூரியன் போல ஒளிவீசும்
அதைக்கண்டு வெட்கம் அடைந்த புலிவாஹனன், தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து "இதனை ஜபமாலையாக தரித்துக் கொள்ளும்" என்று
கொடுக்க முற்பட, மழிசைப்பிரான் தம்
கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணிமாலைகளையும் எடுத்துக் கட்டினார். அவை மிகச்
சிறந்த நவரத்தின மாலைகளாக விளங்கக் கண்ட புலிவாஹனன்
வெட்கப்பட்டு "எல்லா
சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உம்மைக்காட்டிலும் சிறப்புடைய
ஸித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை" என்று சொல்லி துதித்து நமஸ்காரம் செய்து
வேறு வழியாக சென்றுவிட்டான்.
அது சமயம் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் திருக்கோவில்
தலயாத்திரை மேற்கொண்டு வந்து கொண்டிருந்தபோது இந்த குகை வழியே அவர்கள் கவனம்
சென்றது. குகையை சுற்றிலும் இதுவரை காணாத
பேரொளியொன்றைக் கண்டனர். திருமழிசையாழ்வாரின் தேகத்தினின்றும் வீசிய மணம்
அம்மூவரையும் கவர்ந்தது. வைகுந்தனை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தி தலை தாழ்த்தி
வணங்கி மெல்ல குகைக்குள் கால் வைத்து நடந்தனர்.
தன்னை மறந்து யோகத்தில் ஆழ்ந்துள்ள ஞானப்பிழம்பாகிய திருமழிசையாழ்வாரைத்
திருக்கண்களால் கண்டு அவர் திருவடிகளைத் தொட்டு வணங்கி நின்றனர். அப்போது திருமழிசையாழ்வாரும் கண் திறந்து
பார்க்க மூன்று ஆழ்வார்களும் நிற்பதைக் கண்டு பேரின்பம் அடைந்து அவர்களைக் கட்டித்
தழுவி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார். திருமாலின் பெருமையைப்
பற்றி அந்நால்வரும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்துக்கூடி அங்கேயே சில
காலமிருந்து, எம்பெருமானுடைய குணங்களை
ஒருவருக்கொருவர் கூறுதல், கேட்டல், சிந்தித்தல், துதித்தல், அனுபவித்தல் முதலியன
செய்துக் கொண்டு தவம் செய்திருந்தார்கள்.
அதன் மிறகு நால்வரும் பேயாழ்வாருடைய திரு அவதார ஸ்தலமான திருமயிலைக்கு
வந்து, அவ்வாழ்வார் அவதரித்த
அல்லிக் குளக்கரையில் சில ஆண்டுகள் யோகம் செய்த பின்னர் முதலாழ்வார்கள் மூவரும்
திவ்யதேச யாத்திரைக்குப் புறப்பட்டனர். திருமழிசை ஆழ்வார் திருமழிசைக்கு
புறப்பட்டார்.
No comments:
Post a Comment