Sunday 10 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 4


ஒரு நாள் திருமண் காப்பு சாத்திக் கொள்வதற்காக தேடினார் எங்கும் கிடைக்காமையால் மிகவும் கவலை அடைந்தார்.. அன்றிரவு எம்பெருமான் அவரது கனவில் தோன்றி, கச்சிவெஃகாவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையிலே திருமண் உள்ளதாக கூறினார். இவர் கவலை மறந்து அங்கு சென்று திருமண் இருப்பது கண்டு பெருமிதம் அடைந்து எடுத்து வந்து எம்பெருமான் நாமங்களை உச்சரித்துக் கொண்டே தரித்துக் கொண்டு பகவதனுபவம் செய்கின்றவராய் சில காலம் கழித்து வந்தார். நாமங்களை சொல்லிக் கொண்டே தரித்துக் கொள்வதனால் தான் அதற்கு திருநாமம் என்ற பெயர் வந்தது. பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த திருவெஃகாவில் அரவணை மேல் பள்ளிக் கொண்டிருக்கின்ற பெருமாளுக்கு தொண்டு செய்துக் கொண்டு பல வருடங்கள் அங்கேயே எழுந்தரியிருந்தார்.  திருமழிசை ஆழ்வாரை தரிசித்துப் போக பக்தர்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்தனர். திருமழிசை ஆழ்வாரின் வளர்ப்புத் தாய்-தந்தையர் வந்தனர். 

கணிக்கண்ணனும் அவனது பெற்றோர்களும் வந்தனர். கணிக்கண்ணன் அவரது பாதத்தில் விழுந்து வணங்கி, "தங்கள் அருளால் பிறந்த இந்த எளியோனுக்கு, தங்களுக்கு கைங்கரியம் செய்யும் பெரும் பாக்கியத்தை எனக்கு தந்தருள வேண்டும்" என்று ப்ரார்த்தித்துக் கொண்டான். அதன் படி கணிக்கண்ணன் தனது ஆச்சார்யரான திருமழிசை ஆழ்வாருக்கு பலவிதமாக தொண்டு செய்து கொண்டு உஞ்சவ்ருத்தி செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான். 

அவ்வூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருத்தியும் ஆழ்வார் தங்கியிருக்கும் இடத்தை அனுதினமும் இரண்டு வேளையும் திருவலகிடுதல், மொழுகுதல், கோலம் இடுதல் முதலான கைங்கர்யங்களை செய்து வந்தாள். ஒரு நாள் வேடிக்கையாக அந்த மூதாட்டியை பார்த்து, "அம்மா உங்களது கைங்கர்யத்துக்கு என்ன சன்மானம் தரலாம்" என்று கேட்டார் ஆழ்வார். "ஸ்வாமி தங்களுக்கு பல்லாண்டு சேவை புரிந்து வர இந்த வயோதிகமும் சோர்வும் மிகத் தடையாக உள்ளது, அதை நீக்குவதற்கு அருள் செய்தால் போதும்" என்று கூற "அதன்படியே ஆகட்டும்" என்று கூறி அருள் பொங்கும் திருக்கண்ணால் அவளை பார்த்தார்.  அந்த க்ஷணமே தேவப்பெண் போல் ஸ்வரூபத்தை பெற்றாள். அந்த அதிசயத்தைக் கண்டு ஊரே ப்ரமிப்பில் ஆழ்ந்தது.  காஞ்சி மாநகரை ஆண்ட பல்லவ மன்னன் ஒரு நாள் யானை மீது வந்து கொண்டிருந்த போது இந்த பெண்மணியை பார்த்து விட்டான்.....அவளது அழகில் மயங்கிய மன்னன் அரண்மனை சென்ற பின்பும் அவள் நினைவாகவே இருந்தான். இரவில் தூக்கமின்றி தவித்தான். மறுநாள் முத்துப்பல்லக்கில் அவளை அழைத்து வரும் படி காவலரை அனுப்பினான். அவர்களும் அவ்விதமே அழைத்து வர அவளிடம் அரசன் தான் காதலை வெளிப்படுத்த அந்த பெண்ணும் நாணத்தோடு சம்மதம் தெரிவிக்க அரசன் அவளை திருமணம் செய்துக் கொண்டான். ஆழ்வாரின் அருளால் இளமை பெற்ற அந்த பெண்ணுடன் பல காலம் சந்தோஷமாக இல்லறம் நடத்திய அரசன் முதுமை அடைந்தான். ஆனால் அப்பெண்ணோ இளமை பூத்துக் குலுங்கும் அழகோடு அன்று கண்ட மேனியோடு எப்போதும் போல காணப்பட்டாள். 

அவளது இளமை ரகசியம் என்ன என்பதை மன்னரால் உணர முடியவில்லை. அதை ராணியிடமே கேட்க.. இதற்கு மேலும் மறைக்க விரும்பாத ராணி உண்மையை எடுத்துரைத்தாள். அவ்வருளை தானும் அடைவதற்கு உபாயத்தாய்க் கேட்டான் அரசன். அதற்கு அவள், "தினமும் உஞ்சவ்ருத்திக்கு வருகிற கணிகண்ணன் என்பவர் அந்த யோகிக்கு அந்தரங்க சிஷ்யர் ஆவர். அவரை புருஷகாரமாகக் கொண்டு திருமழிசைப்பிரானை வணங்கினால் நீர் விரும்பியது கிட்டும்" என்றுரைத்தாள். அவ்வாறே மறுநாள் கணிகண்ணன் வரும் போது அவரை உபசரித்து, "உமது ஆச்சார்யரை நான் சேவிப்பதற்காக இங்கு அழைத்து வரவேண்டும்" என்று ப்ரார்த்திக்க, "எமது ஆச்சார்யர் எங்கும் எழுந்தருளார்" என்று கூறிவிட, அரசன், "என்னையாவது அவரிடம் அழைத்துச் சென்று அவருடைய கருணைக்கு இலக்காக்கி அவரது அருளால் என்னை என்றும் மாறாத இளமை பேறுடையவனாக ஆக்க வேண்டும்" என்று வேண்ட, அதற்கும் அவர் உடன்படவில்லை. அதைக் கேட்டு அரசன் வருந்தி நிற்கையில் அமைச்சர்கள் அவரை தேற்றி, தெய்வ புலமையுடைய இக்கணிகண்ணன் வாயினால் பாடினாலே பல அற்புதங்கள் நிகழ்கின்றன, இவரால் பாடப்பெற்றால் நீங்கள் விரும்பியது கைக்கூடலாம்" என்று கூறினர். அவர் கணிகண்ணனிடம், "எனக்கு மாறாத இளமை வரும்படி தாங்கள் கவிப்பாட வேண்டும்" என்று கூற, "மன்னா, பகசை வண்ணனை பாடும் வாயால் மானுடனை பாடுவதா ஒரு காலும் அது செய்ய மாட்டேன்" என்றுரைத்தார்."அரசனும் ஆண்டவனும் ஒன்று தானே" என்று அரசன் கூற, "அப்படியானால் நான் ஆண்டவனையே பாடுகிறேன்" என்று கூறி பாடத் தொடங்கினார். தன்னை பாடாததால் கோபம் கொண்ட அரசன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டான். "இந்நாட்டில் மட்டும் என் அரங்கன் பள்ளிக்கொள்ளவில்லை 108 திவ்ய தேசங்களிலும் பள்ளிக் கொண்டிருக்கின்றான். நான் போய்விட்டால் என் குருநாதரும் வந்து விடுவார்...அவரோடு அனந்தனும் வந்து விடுவான் இது உறுதி என்று கூறி விட்டு குருநாதரிடம் வந்து நடந்தததை கூறி, " தாங்களுக்கு இந்த எளியவன் செய்யும் பணியில் இப்படி தடை வரும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று வருத்தத்துடன் கூறி ஆழ்வாரை அநேக தண்டனிட்டு புறப்பட தயாரானார். "கணிக்கண்ணா! என்னை நீ இப்படி தனியாக விட்டுவிட்டு செல்லலாமா? நீ எனது சிஷ்யன் மட்டும் அல்லவே உற்ற நண்பனும் அல்லவா? நீயில்லாத காஞ்சியில் நான் மட்டும் எப்படி இருப்பேன். வா இதை பெருமானிடமே முறையிடுவோம்" என்று சொல்லி கணிக்கண்ணனை கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்தார் திருமழிசை ஆழ்வார்.

"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
  செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமூன்றன்
 பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்"

என்று திருமழிசை ஆழ்வார் வைகுண்ட நாதனையும் தம்மோடு வருமாறு கூறிவிட்டு கணிக்கண்ணனுடன் புறப்பட்டார். எம்பெருமானும் அவ்வண்ணமே நாகத்தணையை சுருட்டிக் கொண்டு, ஆழ்வார் பின்னே எழுந்தருளினார். மூவரும் அவ்வூரை விட்டு அகன்று ஓரிடத்தில் தங்கினார்கள். இப்படி இம்மூவரும் நீங்கியதால் மற்ற தெய்வங்களும் அவர்களைப் பின்தொடர காஞ்சி நகரமே வாட்டமுற்றது.  மறுநாள் கோயிலின் கதவைத் திறந்த அர்ச்சகர்கள் எங்கு திருமாலின் விக்ரகம் இல்லாததுக் கண்டு அதிர்ச்சியுற்று மன்னவனிடம் சென்று முறையிட்டனர். தெய்வக்குற்றம் நிகழ்ந்தது போல் அழுதனர். அதைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியுற்றான். அடியவருக்கு செய்த தவறினால் தான் பெருமானும் போய்விட்டார் என்பதை உணர்ந்து வருந்தினான். உடனே அமைச்சர்கள் புடைசூழ அவர்கள் இருப்பிடம் தேடி வந்து கணிக்கண்ணனின் காலில் விழுந்து வணங்கி கலங்கி மன்னிப்பு கேட்டார். கக்சிக்கு திரும்பும்படி ப்ரார்த்தித்தார். கணிக்கண்ணனும் திருமழிசை ஆழ்வாரைப் ப்ரார்த்திக்க, ஆழ்வாரும் அடியாருக்கு எளியவனான எம்பெருமானை,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
     செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமூன்றன்
                                             பைந்நாகப் பாய் படுத்துக் கொள்"

என்று ப்ரார்த்திக்க, அவனும் உடன்பட்டு ஆழ்வாரோடும் கணிக்கண்ணனோடும் புறப்பட்டு திருவெஃகாவை அடைந்து, அங்கு முன்பு போல் வலத்திருக்கையை கீழ் வைத்து படுக்காமல் இடத்திருக்கையை கீழ்ப்படத் தலைமாடு கால்மாடாக மாறி எழுந்தருளினான்.  இப்படி ஆழ்வார் சொன்னபடி செய்தமையாலே அவர்க்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று தமிழிலும், "யதோக்தகாரீ" என்று வடமொழியிலும் அன்று முதல் திருநாமம் வழங்காலாயிற்று. அம்மூவரும் ஓர் இரவு தங்கியிருந்த அந்த ஊர் "ஓரி(ரவிரு)க்கை" என்று அன்று முதல் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. அம்மூவரும் திரும்பியப்பின் கச்சி நகரம் முன்போல பொலிவு பெற்றது. அரசனும் பாகவதர்களுடைய பெருமையை உணர்ந்து ஆழ்வாருக்கும் கணிக்கண்ணனுக்கும் அடியானாக வாழ்ந்து பேறு பெற்றான்.

No comments:

Post a Comment