Monday 25 June 2012

நம்மாழ்வார் வைபவம் - 1


கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருகுருகூரில் 'காரி' என்பவருக்கு குமாரராய் 'சேனைமுதலியார்' எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாய் அவதரித்த சடகோப்பரை உபாஸிக்கிறேன்.

கலியுகத்தின் முதல் வருஷத்தில், வைகாசி விசாகத்தில், உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் விஷ்ணு பக்தியை நிலை நிறுத்துவதற்காகசேனை முதலியாரின் அம்சமாக, அவருடைய அருளினால் த்வயம் என்னும் திவ்யமந்திரத்தை உபதேசிக்க பெற்றவரும், திராவிட வேதத்தை அருளியவருமான சடகோப முனிவரை தியானிக்கிறேன்.

வேதத்தின் உத்திர காண்டமாகிய உபநிஷத்தைத் தமிழ் மொழியில் வெளியிட்ட உலகுக்கெல்லாம் அலங்காரபூதராய், மகிழ்மாலை மார்பினரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

கலியுகத்தில் பிரமாதி என்ற முதல் வருடத்தில், வைகாசி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் விசாக நக்ஷத்திரத்தில், சுக்லபக்ஷம் சதுர்தசியுடன் கூடிய அழகிய கடகலக்னத்தில், 'ஸ்ரீவிஜ்ஞாந' என்னும் எழுத்துக்களால் ஏற்படும் நாற்பத்திரண்டு தினங்கள் சென்றபின் 'லாப' என்னும் எழுத்துக்களால் கிடைக்கும் நாற்பத்து மூன்றாவது கலித்தினத்தில், வஸந்தருதுவில்நம்மை போன்றவர்களின் நல்வினைப்பயனாக மற்ற ஆழ்வார்களை அவயங்களாக கொண்டவரும், ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான பராங்குசர் அவதரித்தார்.

பாண்டிய நாட்டில் தாமிரபரணிக் கரையில் உள்ள திருக்குருகூரில் வேளாள வருணத்தில் எம்பெருமானுக்கே தொண்டு புரிந்து வரும் குலத்தில் பிறந்த திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் வாழ்ந்து வந்தார். அவர் குமாரர் அறந்தாங்கியார் என்பவர். அவர் பிள்ளை சக்ரபாணியார். அவர் பிள்ளை அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரை கண்ணர். அவர் குமாரர் செங்கண்ணர். அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரர் தான் 'மாறன்' என்றும், 'சடகோபன்' என்றும், 'பராங்குசன்' என்றும் பேர் பெற்றவரான உலகுய்ய வந்து அவதரித்தவர் நம்மாழ்வார்.

பொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்கு திருமணம் செய்ய எண்ணி, மலைநாட்டில் 'திருவண்பரிசாரம்' என்னும் திருப்பதியில் உள்ள 'திருவாழ்மார்பர்' என்னும் திருமாலடியவருடைய குமாரத்தியான 'உடையநங்கை' என்பவருக்கு மணம் பேசி முடித்து, விவாஹ மஹோத்ஸவத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்.

காரியார் தன் மனைவி உடையநங்கை எனும் குணவதியோடு இல்லற வாழ்க்கையில் இருந்தபடி எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது ஈகை பல செய்து வந்தார். தன் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை இவர்களை வாட்டி எடுத்தது. ஒரு முறை இவர் தன் மனைவியுடன் தன் மாமனாரின் ஊர் சென்று திரும்பும் வழியில் திருக்குறுங்குடி என்னும் ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பி எம்பெருமானை சேவித்து தன் மனக்குறையைக் கண்ணீர் சிந்தி முறை இட்டார். இருவரும் கண்ணீர் சொரிந்தபடி வேண்டியவாறே கண்ணுறங்கினர். தன்னை நம்பி வாழும் பக்தர்களுக்கு அனைத்தையும் தந்துதவும் மாலவன் அன்றிரவு இருவர் கனவிலும் தோன்றி "நீங்கள் நற்கதியடையும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் என் அம்சமே அருஞ்செல்வனாகத் தோன்றும். வருத்தம் நீங்குவீராக" என்று கூறி மறைந்தார்.

விடிந்ததும் மிக ஆனந்தத்தோடு இறைவனை வணங்கி மாலை ப்ரஸாதங்களை பெற்றுக் கொண்டு திருகுருகூருக்கு எழுந்தருளி வாழ்த்து வருகையில் உடையநங்கையார் கருத்தரிக்க, எம்பெருமான் பாரெல்லாம் உய்யும்படி சேனை முதலியாரை நம்மாழ்வாராக அவதரிக்கும்படி நியமிக்க, மேலே கூறியபடி கலி பிறந்த நாற்பத்து மூன்றாவது நாளில் கலித்தோஷத்தை அகற்றுவதற்காக விஷ்வக்சேனரின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தருளினார். இப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாகவும், சேனைமுதலியாருடைய அம்சமாகவும் ஆழ்வார் அவதரிப்பதற்கு முன்பே "சென்றால் குடையாம்" என்ற ரீதியில், திருவநந்தாழ்வான் என்பவர் இவர் மீது மழை வெய்யில் முதலியன படாமல் ரக்ஷிப்பதற்காக திருகுருகூரில் ஒரு புளியமரமாக அவதரித்து வளர்ந்திருந்தான்.

நம்மாழ்வார் பிறந்த மாத்திரத்திலேயே ஞானமும் பிறந்தது. குழந்தை பிறந்த அன்று தொடங்கி அழுவது, தாய்ப்பால் உண்பது முதலிய உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமல் இருந்த போதிலும் பகவதனுபவத்தாலே எந்த வாட்டமும் இல்லாது வளர்ந்து வந்தார். அவ்வதிசயத்தை கண்ட பெற்றோர் எம்பெருமான் மீது பாரத்தை போட்டு, பிறந்த பன்னிரெண்டாம் திருநாள் அன்று திருகுறுகூரில் எழுந்தருளியிருக்கும்  பொலிந்து நின்ற பிரான் சன்னதிக்கு குழந்தையை எடுத்துக் சென்று, பிரானை சேவிக்கப்பண்ணி வைத்து, அப்பெருமான் திருமுன்பே பக்தி மயக்கத்திலே இருக்கும் அந்த தெய்வக்குழந்தைக்கு, உலக நடைக்கு மாறாக இருந்ததினால் 'மாறன்' என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். தத்தி விளையாட வேண்டிய குழந்தை பெருமானையே சுற்றிச்சுற்றி வந்தது கண்டு பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அக்குழந்தை அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து அசைவற்று ஐம்புலன் அடக்கம் பூண்டது. அங்கேயே கண் விழிக்காமலும் வாய் திறந்து பேசாமலும் எதையும் உண்ணாமலும் மௌனமாகவே பதினாறு ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்தது.

எம்பெருமான் சேனைமுதலியாரை அனுப்பி, அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்க செய்து மயர்வற மதிநலம் அருளினான். கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தைகளின் அறிவை மறைக்கும் சடவாயுவை - பிறக்கும்போதே தம்மை மேலிடாதபடி ஹூங் காரத்தாலே ஓட்டியவராகையால் இவருக்கு 'சடகோபர்' என்றும், திருவுள்ளம் உகந்து பொலிந்து நின்ற பிரான் ப்ரஸாதித்தருளிய மகிழ்மாலையை தரித்ததினால் 'நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்' என்றும் 'மகிழ்மாலை மார்பினர்' என்றும் 'வகுளாபரணர்' என்றும் திருநாமங்கள் பெற்றார்.

Tuesday 19 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 5



பக்தர் புடைசூழ கணிக்கண்ணனுடன் திருமழிசை ஆழ்வார் எம்பெருமானை வணங்கி விடைப்பெற்று ஒருநாள் திருக்குடந்தை தலயாத்திரைப் புறப்பட்டார். வழியெங்கும் வைஷ்ணவ ஷேத்திரங்களை தரிசித்து கொண்டே வந்தனர். பெரும்புலியூர் என்னும் திருத்தலத்தை வந்தடைந்த போது அந்த ஊரில் எங்காவது ஓரிடத்தில் கொஞ்சம் இளைப்பாரிச் செல்லலாம் என்று ஆழ்வார் எண்ணினார். அந்தணர் வசிக்கும் வீதி வழியாக ஆழ்வாரும் கணிக்கண்ணனும் வந்து கொண்டிருந்தபடியால் ஒரு அந்தணர் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தனர். அந்த வீட்டில் அந்தணர்கள் அனைவரும் ஒன்றுகூடி வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். திண்ணையில் வந்தமர்ந்த இவ்விருவரையும் பார்த்து அவர்கள் பெருமையை அறியாமல் வேற்று மதத்தினர் என்றெண்ணி "அவர்கள் கேட்கும்படியாக நாம் வேதம் சொல்லுவது அந்த வேத முதல்வனுக்கு செய்யும் அபச்சாரம் ஆகும்" என்று வேதம் ஓதுவதை நிறுத்திக் கொண்டனர். வேத ஒலி நின்று போனதும் அவர்கள் குறிப்பை புரிந்து கொண்ட ஆழ்வார் மெதுவாக திண்ணையை விட்டிறங்கி வெளியே செல்லத்தொடங்கினார். அவர் புறப்பட்டதை அறிந்த அந்தணர்கள் மீண்டும் வேதம் ஓத தொடங்கினர். இந்த பாகவத அபச்சாரம் செய்ததில் அவர்கள் எந்த இடத்தில் வேதத்தை விட்டோம் என்று புரியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைக் கண்ட ஆழ்வார் தம் வாயால் வேதத்தை உச்சரிக்க கூடாதாகையாலே அவர்களுக்கு விட்ட இடத்தை நினைவூட்டுவதற்காக, அருகில் இருந்த கருப்பு நெல்லை எடுத்து அதை தம்முடைய நகத்தாலே பிளந்து, அவர்கள் விட்ட வாக்கியத்தை நினைவூட்டினார். "நகத்தினால் கிழிப்பட்ட கருநெல்லில் உள்ள அரிசி" எனும் பொருள் பொதிந்த வாக்கியம் வரை சொன்னது அவர்களுக்கு நினைவுக்கு வர மிகுந்த ஆச்சர்யத்துடன் எதிரில் நிற்பவர் சாதாரண மனிதர் அல்லர் பெரிய ஞானப்பண்டிதராக இருக்க வேண்டும் என்றெண்ணி தாங்கள் செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டு அவர் பாதம் பணிந்து தண்டனிட்டு உபசரித்து பேறு பெற்றனர். அவர்களிடம் ஆழ்வாரும் கணிக்கண்ணனும் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அவர்கள் பெருமையை எண்ணி அந்தணர்கள் மகிழ்ச்சியுற்று, "தாங்கள் இங்கேயே தங்கியிருந்து இவ்வூரில் நடக்கும் யாகத்தில் கலந்து கொள்ள வேண்டும், பெரும்புலியூர் பரந்தாமனை போற்றி பாட வேண்டும்" என்று விண்ணப்பித்தனர். ஆழ்வாரும் அவர்கள் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அவர்கள் வீட்டிலேயே தங்கி அவ்வூரிலேயே பிச்சை எடுத்து அமுது செய்தனர். தினமும் அவரது அமுத பாசுரங்களைக் கேட்டு அவ்வூர் மக்கள் பேரானாந்தம் அடைந்தனர். 

ஆழ்வாரும் கணிக்கண்ணனும் பாசுரங்களைப் பாடிக் கொண்டு வீதிவழியே செல்லும் போது கோவிலில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது.  அக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் ஆழ்வார் எந்த திசையை நோக்கி பாடிக் கொண்டு செல்கிறாரோ அந்தந்த திசையில் எல்லாம் தமது கழுத்தை சற்று சாய்த்து செவிமடுப்பதை, ஒவ்வொரு திசையாக திரும்பி திரும்பி ஆழ்வார் பாடிச் செல்லும் பாட்டை ரசித்தபடியே இருந்ததை, அர்ச்சகர்கள் கண்டு வியப்படைந்தனர்.  உடனே ஓடிச் சென்று யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடியார்களிடம் நடந்ததை கூறினர். அது கேட்டு பேரானாந்தம் கொண்ட அடிகளார் ஓடிவந்து ஆழ்வாரை எதிர்க்கொண்டு அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவ்விருவரையும் யாகத்தை சிறப்பித்துக் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். அதன்படியே அவ்விருவரும் யாகசாலைக்கு வர, அடிகளார் ஆழ்வாரை உயர்ந்த ஆசனத்தில் அமரச் செய்து அவரைக் கொண்டே யாகத்தை தொடங்கச் செய்தார்.  இச்செயலைப் பார்த்து பொறாமை பட்ட சில அந்தணர்கள் ஆழ்வாருடைய ஜாதியைப் பற்றி கேலி செய்து பலவாறு பழித்தனர். அதுக்கேட்டு அடிகளார் பெரிதும் வருத்தமுற்று ஆழ்வாரின் பெருமைகளை எடுத்துரைத்தார். அவர்கள் அது கேட்காமல் விதண்டாவாதம் செய்தபடியே இருந்ததை பார்த்த ஆழ்வார் இவருக்காகவாவது பழிப்வர்களிடம் நம் பெருமையை காட்டியே தீரவேண்டும் என்றெண்ணி, "சக்கரத்தை திருக்கரம் பெற்ற திருமாலே! என் உள்ளத்தினுள்ளே நீ உறங்கும் வண்ணம் எனது புற உடம்பிலும் உனது திவ்ய மங்கள திருமேனியைக் காட்டி, இக்குறும்பை நீக்கி அடியவனையும் உன்னை போல் ஈசனாக்கி இவ்வேள்வி சடங்கர்களுக்கு நல்லறிவு உண்டாகச் செய்திடல் வேண்டும்" என்னும் பொருள்படும்படியான "அக்கரங்க ளக்கரங்க" என்று தொடங்கும் பாசுரத்தை மெய்மறந்து பாடி விண்ணப்பம் செய்தருள, எம்பெருமான் அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானுமாய் இவருடைய திருமேனியிலே அவர்கள் அனைவரும் காணுமாறு காட்சி தர, பழித்த அந்தணர்கள் அனைவரும் எம்பெருமானை ஆழ்வாரின் திருமார்பிலே கண்ணாரக் கண்டு, அவர் திருவடியிலே விழுந்து மன்னிப்பு கோரி, அவருக்கு ப்ரஹ்மரதம் பண்ணி, கௌரவித்துத் திருமாலடியாரை பூஜிக்கும் பேறு பெற்றார்கள். அதற்குப் பின் ஆழ்வாரும் அவர்களுக்குப் பல உபதேசங்களைச் செய்தருளி வாழ்வித்து, திருக்குடந்தையை நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார்.  

குடந்தையில் காவிரியின் மருங்கிலே கோவில் கொண்டிருக்கும் ஆராவமுத பெருமானை தரிசித்து பாசுரங்கள் பாடினார். தாம் எழுதிய பாசுரங்களை பெருமான் அங்கீகரிக்க வேண்டும் என்று ஆழ்வார் விரும்பினார். தாம் எழுதிய பாசுரங்களை திருமுடித்தாங்கி ஆழ்வாரும் கணிக்கண்ணனும், பெரியோர்கள், பண்டிதர்கள் புடைசூழ பெருமானின் திருவடியில் ப்ரபந்த ஏடுகளை சமர்ப்பித்து, பின் அதை எடுத்துக் கொண்டு காவிரிக்குச் சென்று, மாலவனை மனதில் தியானித்து, வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கும் காவிரியில் அந்த ஏடுகளை விட்ட போது, அதில் இரண்டு ஏடுகள் மட்டும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து ஆழ்வாரின் திருவடியில் தங்கியது. (அந்த இரண்டு ஏடுகள் தான் நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் இரண்டு திவ்ய ப்ரபந்தங்கள் ஆகும்) அந்த ப்ரபந்த ஏடுகளை கையில் எடுத்துக் கொண்டுதிருக்கோவிலை அடைந்து எம்பெருமானின் திருவடியில் சமர்ப்பித்து எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார்.  பெருமானின் பெருங்கருணையை கண்டு வியந்து கண்ணீர் மல்க, "காவிரிக்கரை மருங்கில் ஆராவமுதா எனக்காக நடந்து வந்த உமது திருவடிகள் நொந்து போயினவா? துயில் கொள்ளும் நீ எழுந்து வந்து இந்த எளியவனோடு பேசு" என்று ப்ரார்த்தனை செய்தார். அக்கணமே ஆராவமுதன் பேரொளி பொங்க தமது அற்புதக் கோலாகல வைபவக் காட்சியைக் காட்டினார். ஆழ்வார் ஆராவமுதப் பெருமானின் ஏரார்க் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து கொண்டாடினார். அந்த எம்பெருமானின் திருமேனியையே தியானம் செய்துக் கொண்டு பல வருஷங்கள் யோகத்தில் எழுந்தருளியிருந்து, அந்த திவ்ய தேசத்திலேயே திருநாட்டுக்கு எழுந்தருளினார். ஆராவமுதன், அர்ச்சாரூபியாகத் திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார் அமுது செய்த ப்ரஸாதத்தையே அமுது செய்வது என்னும் நியமத்தை மேற்கொள்வதன்மூலம் தனது பக்தபாரதந்தர்யத்தை காட்டி அருளினான் என்றும், அதனாலேயே திருமழிசை ஆழ்வாருக்கு திருமழிசைப்பிரான் என்றும், ஆராவமுதனுக்கு ஆராவமுதாழ்வார் என்றும் திருநாமங்கள் வழங்கி வருகின்றன என்றும் பெரியோர்கள் சொல்லுவர். 

திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி, திருச்சந்தவிருத்தம் என்னும் ப்ரபந்தங்களை பாடினார். அவரால் திருவிண்ணகர், திருக்கோஷ்டியூர், திருவரங்கம், திருஅன்பில், திருக்குடந்தை, திருப்பேர் நகர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருவெஃகா, திருப்பாடகம், திருவேங்கடம்திருப்பாற்கடல், திருதுவாரகை, திருஎவ்வுள், திருஊரகம், திருவல்லிக்கேணி, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

Sunday 10 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 4


ஒரு நாள் திருமண் காப்பு சாத்திக் கொள்வதற்காக தேடினார் எங்கும் கிடைக்காமையால் மிகவும் கவலை அடைந்தார்.. அன்றிரவு எம்பெருமான் அவரது கனவில் தோன்றி, கச்சிவெஃகாவை அடுத்த பொற்றாமரைப் பொய்கையிலே திருமண் உள்ளதாக கூறினார். இவர் கவலை மறந்து அங்கு சென்று திருமண் இருப்பது கண்டு பெருமிதம் அடைந்து எடுத்து வந்து எம்பெருமான் நாமங்களை உச்சரித்துக் கொண்டே தரித்துக் கொண்டு பகவதனுபவம் செய்கின்றவராய் சில காலம் கழித்து வந்தார். நாமங்களை சொல்லிக் கொண்டே தரித்துக் கொள்வதனால் தான் அதற்கு திருநாமம் என்ற பெயர் வந்தது. பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த திருவெஃகாவில் அரவணை மேல் பள்ளிக் கொண்டிருக்கின்ற பெருமாளுக்கு தொண்டு செய்துக் கொண்டு பல வருடங்கள் அங்கேயே எழுந்தரியிருந்தார்.  திருமழிசை ஆழ்வாரை தரிசித்துப் போக பக்தர்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்தனர். திருமழிசை ஆழ்வாரின் வளர்ப்புத் தாய்-தந்தையர் வந்தனர். 

கணிக்கண்ணனும் அவனது பெற்றோர்களும் வந்தனர். கணிக்கண்ணன் அவரது பாதத்தில் விழுந்து வணங்கி, "தங்கள் அருளால் பிறந்த இந்த எளியோனுக்கு, தங்களுக்கு கைங்கரியம் செய்யும் பெரும் பாக்கியத்தை எனக்கு தந்தருள வேண்டும்" என்று ப்ரார்த்தித்துக் கொண்டான். அதன் படி கணிக்கண்ணன் தனது ஆச்சார்யரான திருமழிசை ஆழ்வாருக்கு பலவிதமாக தொண்டு செய்து கொண்டு உஞ்சவ்ருத்தி செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான். 

அவ்வூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருத்தியும் ஆழ்வார் தங்கியிருக்கும் இடத்தை அனுதினமும் இரண்டு வேளையும் திருவலகிடுதல், மொழுகுதல், கோலம் இடுதல் முதலான கைங்கர்யங்களை செய்து வந்தாள். ஒரு நாள் வேடிக்கையாக அந்த மூதாட்டியை பார்த்து, "அம்மா உங்களது கைங்கர்யத்துக்கு என்ன சன்மானம் தரலாம்" என்று கேட்டார் ஆழ்வார். "ஸ்வாமி தங்களுக்கு பல்லாண்டு சேவை புரிந்து வர இந்த வயோதிகமும் சோர்வும் மிகத் தடையாக உள்ளது, அதை நீக்குவதற்கு அருள் செய்தால் போதும்" என்று கூற "அதன்படியே ஆகட்டும்" என்று கூறி அருள் பொங்கும் திருக்கண்ணால் அவளை பார்த்தார்.  அந்த க்ஷணமே தேவப்பெண் போல் ஸ்வரூபத்தை பெற்றாள். அந்த அதிசயத்தைக் கண்டு ஊரே ப்ரமிப்பில் ஆழ்ந்தது.  காஞ்சி மாநகரை ஆண்ட பல்லவ மன்னன் ஒரு நாள் யானை மீது வந்து கொண்டிருந்த போது இந்த பெண்மணியை பார்த்து விட்டான்.....அவளது அழகில் மயங்கிய மன்னன் அரண்மனை சென்ற பின்பும் அவள் நினைவாகவே இருந்தான். இரவில் தூக்கமின்றி தவித்தான். மறுநாள் முத்துப்பல்லக்கில் அவளை அழைத்து வரும் படி காவலரை அனுப்பினான். அவர்களும் அவ்விதமே அழைத்து வர அவளிடம் அரசன் தான் காதலை வெளிப்படுத்த அந்த பெண்ணும் நாணத்தோடு சம்மதம் தெரிவிக்க அரசன் அவளை திருமணம் செய்துக் கொண்டான். ஆழ்வாரின் அருளால் இளமை பெற்ற அந்த பெண்ணுடன் பல காலம் சந்தோஷமாக இல்லறம் நடத்திய அரசன் முதுமை அடைந்தான். ஆனால் அப்பெண்ணோ இளமை பூத்துக் குலுங்கும் அழகோடு அன்று கண்ட மேனியோடு எப்போதும் போல காணப்பட்டாள். 

அவளது இளமை ரகசியம் என்ன என்பதை மன்னரால் உணர முடியவில்லை. அதை ராணியிடமே கேட்க.. இதற்கு மேலும் மறைக்க விரும்பாத ராணி உண்மையை எடுத்துரைத்தாள். அவ்வருளை தானும் அடைவதற்கு உபாயத்தாய்க் கேட்டான் அரசன். அதற்கு அவள், "தினமும் உஞ்சவ்ருத்திக்கு வருகிற கணிகண்ணன் என்பவர் அந்த யோகிக்கு அந்தரங்க சிஷ்யர் ஆவர். அவரை புருஷகாரமாகக் கொண்டு திருமழிசைப்பிரானை வணங்கினால் நீர் விரும்பியது கிட்டும்" என்றுரைத்தாள். அவ்வாறே மறுநாள் கணிகண்ணன் வரும் போது அவரை உபசரித்து, "உமது ஆச்சார்யரை நான் சேவிப்பதற்காக இங்கு அழைத்து வரவேண்டும்" என்று ப்ரார்த்திக்க, "எமது ஆச்சார்யர் எங்கும் எழுந்தருளார்" என்று கூறிவிட, அரசன், "என்னையாவது அவரிடம் அழைத்துச் சென்று அவருடைய கருணைக்கு இலக்காக்கி அவரது அருளால் என்னை என்றும் மாறாத இளமை பேறுடையவனாக ஆக்க வேண்டும்" என்று வேண்ட, அதற்கும் அவர் உடன்படவில்லை. அதைக் கேட்டு அரசன் வருந்தி நிற்கையில் அமைச்சர்கள் அவரை தேற்றி, தெய்வ புலமையுடைய இக்கணிகண்ணன் வாயினால் பாடினாலே பல அற்புதங்கள் நிகழ்கின்றன, இவரால் பாடப்பெற்றால் நீங்கள் விரும்பியது கைக்கூடலாம்" என்று கூறினர். அவர் கணிகண்ணனிடம், "எனக்கு மாறாத இளமை வரும்படி தாங்கள் கவிப்பாட வேண்டும்" என்று கூற, "மன்னா, பகசை வண்ணனை பாடும் வாயால் மானுடனை பாடுவதா ஒரு காலும் அது செய்ய மாட்டேன்" என்றுரைத்தார்."அரசனும் ஆண்டவனும் ஒன்று தானே" என்று அரசன் கூற, "அப்படியானால் நான் ஆண்டவனையே பாடுகிறேன்" என்று கூறி பாடத் தொடங்கினார். தன்னை பாடாததால் கோபம் கொண்ட அரசன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டான். "இந்நாட்டில் மட்டும் என் அரங்கன் பள்ளிக்கொள்ளவில்லை 108 திவ்ய தேசங்களிலும் பள்ளிக் கொண்டிருக்கின்றான். நான் போய்விட்டால் என் குருநாதரும் வந்து விடுவார்...அவரோடு அனந்தனும் வந்து விடுவான் இது உறுதி என்று கூறி விட்டு குருநாதரிடம் வந்து நடந்தததை கூறி, " தாங்களுக்கு இந்த எளியவன் செய்யும் பணியில் இப்படி தடை வரும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று வருத்தத்துடன் கூறி ஆழ்வாரை அநேக தண்டனிட்டு புறப்பட தயாரானார். "கணிக்கண்ணா! என்னை நீ இப்படி தனியாக விட்டுவிட்டு செல்லலாமா? நீ எனது சிஷ்யன் மட்டும் அல்லவே உற்ற நண்பனும் அல்லவா? நீயில்லாத காஞ்சியில் நான் மட்டும் எப்படி இருப்பேன். வா இதை பெருமானிடமே முறையிடுவோம்" என்று சொல்லி கணிக்கண்ணனை கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்தார் திருமழிசை ஆழ்வார்.

"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
  செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமூன்றன்
 பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்"

என்று திருமழிசை ஆழ்வார் வைகுண்ட நாதனையும் தம்மோடு வருமாறு கூறிவிட்டு கணிக்கண்ணனுடன் புறப்பட்டார். எம்பெருமானும் அவ்வண்ணமே நாகத்தணையை சுருட்டிக் கொண்டு, ஆழ்வார் பின்னே எழுந்தருளினார். மூவரும் அவ்வூரை விட்டு அகன்று ஓரிடத்தில் தங்கினார்கள். இப்படி இம்மூவரும் நீங்கியதால் மற்ற தெய்வங்களும் அவர்களைப் பின்தொடர காஞ்சி நகரமே வாட்டமுற்றது.  மறுநாள் கோயிலின் கதவைத் திறந்த அர்ச்சகர்கள் எங்கு திருமாலின் விக்ரகம் இல்லாததுக் கண்டு அதிர்ச்சியுற்று மன்னவனிடம் சென்று முறையிட்டனர். தெய்வக்குற்றம் நிகழ்ந்தது போல் அழுதனர். அதைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியுற்றான். அடியவருக்கு செய்த தவறினால் தான் பெருமானும் போய்விட்டார் என்பதை உணர்ந்து வருந்தினான். உடனே அமைச்சர்கள் புடைசூழ அவர்கள் இருப்பிடம் தேடி வந்து கணிக்கண்ணனின் காலில் விழுந்து வணங்கி கலங்கி மன்னிப்பு கேட்டார். கக்சிக்கு திரும்பும்படி ப்ரார்த்தித்தார். கணிக்கண்ணனும் திருமழிசை ஆழ்வாரைப் ப்ரார்த்திக்க, ஆழ்வாரும் அடியாருக்கு எளியவனான எம்பெருமானை,

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்னா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
     செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமூன்றன்
                                             பைந்நாகப் பாய் படுத்துக் கொள்"

என்று ப்ரார்த்திக்க, அவனும் உடன்பட்டு ஆழ்வாரோடும் கணிக்கண்ணனோடும் புறப்பட்டு திருவெஃகாவை அடைந்து, அங்கு முன்பு போல் வலத்திருக்கையை கீழ் வைத்து படுக்காமல் இடத்திருக்கையை கீழ்ப்படத் தலைமாடு கால்மாடாக மாறி எழுந்தருளினான்.  இப்படி ஆழ்வார் சொன்னபடி செய்தமையாலே அவர்க்கு "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்" என்று தமிழிலும், "யதோக்தகாரீ" என்று வடமொழியிலும் அன்று முதல் திருநாமம் வழங்காலாயிற்று. அம்மூவரும் ஓர் இரவு தங்கியிருந்த அந்த ஊர் "ஓரி(ரவிரு)க்கை" என்று அன்று முதல் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. அம்மூவரும் திரும்பியப்பின் கச்சி நகரம் முன்போல பொலிவு பெற்றது. அரசனும் பாகவதர்களுடைய பெருமையை உணர்ந்து ஆழ்வாருக்கும் கணிக்கண்ணனுக்கும் அடியானாக வாழ்ந்து பேறு பெற்றான்.

Thursday 7 June 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 3


திருமழிசை ஆழ்வார், பேயாழ்வாரின் பேரருளோடு ஒரு நாள் திருவேங்கட கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள திருவல்லிக்கேணி என்னும் திருநகரை அடைந்தார். அங்கு தங்கியிருந்து தினமும் அல்லிக்குளத்தில் நீராடி மூலமூர்த்தியான பார்த்தசாரதியையும் சேவித்து சிந்தை மகிழ்ந்தார். அதன் பிறகு அங்கேயே அவர் நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

ஒரு நாள் ருஷப வாகனத்தில் பார்வதியும் சிவனும் ஆகாய மார்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். பார்வதி இவருடைய தேஜசைப் கண்டு வியப்புற்று, "இவர் யார்" என வினவ, சிவபிரான், "இம்மஹானுபாவர் நம் அடிமையாய் இருந்து இப்போது நாராயணனுக்கு அடிமைப்பட்டு இருப்பவர்" என்று சொன்னவுடன் உமாதேவி, "அத்தகைய பெரியவருக்கு நாமும் காட்சி தந்து ஏதாவது வரம் அளித்து விட்டு செல்வோம்" என்று கூற, அவள் விருப்பப்படி திருமழிசைப்பிரான் முன் தோன்றினார். ஆனால் திருமழிசை ஆழ்வார் அவரை பார்க்காதது போல் ஒரு கந்தைத் துணியைத் தைத்து கொண்டிருந்தார். இருப்பினும் தன் வரவு வீணாகக் கூடாது என்றெண்ணிய சிவபிரான், "நீ விரும்பிய வரத்தை பெற்று வாழ்வாய்" என்று நிர்ப்பந்தமாக கேட்க, அது கேட்ட ஆழ்வார், "மோக்ஷலோகமான பரமபதத்தை அருளவல்லீராகில் அருள்வீர்" என்றார். அதற்கு மஹாதேவர், "அது நம்மால் இயலாது, அதை தரவல்லவன் முகுந்தன் ஒருவனே. அது தவிர வேறு வரம் கேள்" என்று கூற, திருமழிசை ஆழ்வார் புன்முறுவல் செய்து, "அந்த முக்தியை பெறுவதற்கு ஸாதனங்களை அனுஷ்டிப்பதற்கு உறுப்பாக நீண்ட ஆயுளையேனும் எனக்கு தரவேண்டும்"  என்று கேட்க அதற்கு கைலாசநாதர், " அது கர்மானுக் குணமாக ஏற்கனவே வரம்புக் கட்டப்பட்டுவிட்டது. அதை வளரச் செய்ய என்னால் ஆகாது. வேறு வரம் வேண்டுவாய்" என்று வினவ திருமழிசைபிரான் இகழ்ச்சி தோன்ற நகைத்தார். அது கண்ட சிவபிரான் சினம்கொண்டு, "செருக்குடைய உன்னை இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்" என்று கூறி நெற்றிக்கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஊழிக்கால நெருப்புப் போலே அக்னி கிளர்ந்து எழுந்தது. அது கண்ட திருமழிசை பிரான், "இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்" என்று சொல்லித் தமது வலத்திருவடியில் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்து விட, அதிலிருந்து ஒரு பெரும் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பலமடங்கு பெரியதாகி, நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பாய் அடக்கி, முக்கண்ணனையும் சுடத் தொடங்கிற்று. அது கண்ட சிவபிரான் அதிலிருந்து தப்பிக்க தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் காலத்திற்போலே மழை பொழியும் படி நியமித்தார். அவ்வண்ணமே அம்மேகங்களும் மழை பொழிந்ததனால் பெருவெள்ளம் ஏற்படவும், பரம பாகவதரான திருமழிசை ஆழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை த்யானித்துக் கொண்டு வீற்றிருந்தார். அதை கண்டு சிவபிரான் ஆழ்வாருக்கு, "பக்திஸாரர்" என்று நாமம் சூட்டி அவரை மிகக் கொண்டாடி கைலாயம் சேர்ந்தார்.

அதற்குப்பின் ஆழ்வார் முன்போலவே யோகத்தில் எழுந்திருக்கையில், அஷ்டமாசித்தி பெற்ற சுத்திஹாரன் என்னும் சித்தன் புலி மீது அமர்ந்து விண்வழியே வந்து கொண்டு இருந்தான். நிஷ்டையிலிருந்த திருமழிசை ஆழ்வாருக்கு மேற்கு புறமாக அந்த சித்தன் சென்ற போது புலியின் வேகம் தடைப்பட்டது. ஒன்றும் புரியாது திகைத்துப்போய் கீழே பார்த்தான் அந்த சித்தன்.  அல்லிக்குளத்தருகே பெரும் ஜோதி ஒன்று தெரிய பூமிக்கு இறங்கினான் சித்தன். ஞானத்தவமிருக்கும் திருமழிசை ஆழ்வாரின் நிஷ்டாகினியின் ஒளியே அந்த ஜோதி என்பதையும் அதுவே தனது புலியின் ஓட்டத்தை தடுத்தது என்பதையும் புரிந்துக் கொண்டான். கந்தல் ஆடையுடன் தவத்திலிருந்த ஆழ்வாரிடம் ஒரு பட்டுத்துணியை வரவழைத்து, "இதோ இந்த பட்டாடையை உடுத்திக் கொண்டு உம் கந்தலாடையை தூக்கி எறியும்" என்றான் அவன்.  அவனுடைய சித்த வேலைகளை புரிந்து கொண்ட ஆழ்வார் தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே மாணிக்கமயமானதொரு கவசத்தை உண்டாக்கி அவனிடம் கட்டினார். சூரியன் போல ஒளிவீசும் அதைக்கண்டு வெட்கம் அடைந்த புலிவாஹனன், தன் கழுத்தில் இருந்ததொரு மணிமாலையை எடுத்து "இதனை ஜபமாலையாக தரித்துக் கொள்ளும்" என்று கொடுக்க முற்பட, மழிசைப்பிரான் தம் கழுத்திலிருந்த துளசி மணிமாலைகளையும், தாமரை மணிமாலைகளையும் எடுத்துக் கட்டினார். அவை மிகச் சிறந்த நவரத்தின மாலைகளாக விளங்கக் கண்ட புலிவாஹனன்  வெட்கப்பட்டு "எல்லா சித்தர்களையும் வென்று வந்த என்னை நீர் வென்றதனால் உம்மைக்காட்டிலும் சிறப்புடைய ஸித்த புருஷன் உலகெங்கிலும் இல்லை" என்று சொல்லி துதித்து நமஸ்காரம் செய்து வேறு வழியாக சென்றுவிட்டான்.   

மேலும் அவர் அங்கு யோகம் செய்து கொண்டிருக்கையில், 'கொங்கண ஸித்தன்' என்னும் ரஸவாதி ஒருவன் அவர் பெருமையை கேள்விப்பட்டு அவரிடம் வந்து, கோடி இரும்பை பொன்னாக்கவல்ல ரஸக்குளிகையைக் காட்டி, "இதை பெற்று மகிழ்வீர்" என்று கூற, அது கேட்டு திருமழிசைப்பிரான் அதை விலக்கி, தமது மேனியின் புழுதியை ஒன்றாக திரட்டி, "இக்குளிகை பலக் கோடி கற்களைப் பொன்னாக்க வல்லது. இதைக் கொண்டு நீ பிழைத்துக் கொள்" என்று கொடுக்க, அவன் அதை உடனே பரிசோதித்து பார்த்து அப்படியே இருக்கக் கண்டு பெரும் வியப்புற்று, அவரை தண்டனிட்டு சென்றான். இதிலிருந்து எம்பெருமான் அருளாலே ஆழ்வாருக்கு எல்லா ஸித்திகளும் கைவந்திருந்தன என்றும், அவர் அவற்றை ஒரு பொருளாகவே மதிக்கவில்லை என்றும் தெரிகிறது. இப்படி பலபேரால் இடையூறு வருவதை தவிர்ப்பதற்காக யார் கண்ணிலும் படாமல் நிஷ்டையில் இருக்க நினைத்த அவர் திருவல்லிக்கேணியிலிருந்து நீண்ட தூரம் நடந்து சென்றார். 

ஒரு மலைப் பகுதியில் தென்பட்ட குகையொன்றில் அவர் தவம் செய்ய தொடங்கினார். 
அது சமயம் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் திருக்கோவில் தலயாத்திரை மேற்கொண்டு வந்து கொண்டிருந்தபோது இந்த குகை வழியே அவர்கள் கவனம் சென்றது.  குகையை சுற்றிலும் இதுவரை காணாத பேரொளியொன்றைக் கண்டனர். திருமழிசையாழ்வாரின் தேகத்தினின்றும் வீசிய மணம் அம்மூவரையும் கவர்ந்தது. வைகுந்தனை நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்தி தலை தாழ்த்தி வணங்கி மெல்ல குகைக்குள் கால் வைத்து நடந்தனர்.  தன்னை மறந்து யோகத்தில் ஆழ்ந்துள்ள ஞானப்பிழம்பாகிய திருமழிசையாழ்வாரைத் திருக்கண்களால் கண்டு அவர் திருவடிகளைத் தொட்டு வணங்கி நின்றனர்.  அப்போது திருமழிசையாழ்வாரும் கண் திறந்து பார்க்க மூன்று ஆழ்வார்களும் நிற்பதைக் கண்டு பேரின்பம் அடைந்து அவர்களைக் கட்டித் தழுவி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார். திருமாலின் பெருமையைப் பற்றி அந்நால்வரும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமொத்துக்கூடி அங்கேயே சில காலமிருந்து, எம்பெருமானுடைய குணங்களை ஒருவருக்கொருவர் கூறுதல், கேட்டல், சிந்தித்தல், துதித்தல், அனுபவித்தல் முதலியன செய்துக் கொண்டு தவம் செய்திருந்தார்கள்.  அதன் மிறகு நால்வரும் பேயாழ்வாருடைய திரு அவதார ஸ்தலமான திருமயிலைக்கு வந்து, அவ்வாழ்வார் அவதரித்த அல்லிக் குளக்கரையில் சில ஆண்டுகள் யோகம் செய்த பின்னர் முதலாழ்வார்கள் மூவரும் திவ்யதேச யாத்திரைக்குப் புறப்பட்டனர். திருமழிசை ஆழ்வார் திருமழிசைக்கு புறப்பட்டார்.