Wednesday 16 May 2012

முதலாழ்வார்கள் வைபவம் - பொய்கை ஆழ்வார்

முதலாழ்வார்கள் வைபவத்தில் முதலில் நாம் ஒவ்வொருவருடைய வரலாற்றை தனித்தனியாக பகிர்ந்து கொண்டு பிறகு அவர்கள் மூவரும் எங்கே எப்படி ஒன்றக சேர்கிறார்கள் எங்கு சென்றார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.
                                                       
                                                                பொய்கை ஆழ்வார்:

பிரம்ம தேவன் நாராயணனை யாகம் செய்து பூஜித்த பெருமை மிக்க நகரமும், சோழ பல்லவ மன்னர்களுக்கு தலைநகரமாக அனைத்து இயற்கை வளங்களோடும் செழிப்புற்று விளங்கிய தெய்வதிருநகருமான காஞ்சிபுரத்தில், தாமரை பொய்கைகளும் குளிர்ந்த சிற்றோடைகளும் செந்தாமரை, வெண்தாமரை, கெருங்குவளை, நீலோர்பவம் போன்ற தேன் சுரக்கும் மலர்களுடன் திருவெஃகா திருக்கோவிலின் சந்நிதி பார்ப்போரை வசீகரிக்கும் தன்மை உடையது.

அன்னங்கள் நீந்தி விளையாடும் அழகிய பொய்கைகளில் விண்ணவரும் கந்தர்வரும் நீந்தி களிப்பதும் தேவலோக அப்ஸர மாதர்கள் ஜலக்ரீடை புரிவதும் தெய்வாம்ச புகலிடமாக விளங்குகிறது.

எழில் கொஞ்சும் அந்த தாமரை பொய்கையின் நடுவே மடலவிழ்ந்த ஒரு மனோகரத் தாமரையில் ஸ்ரீமந்நாராயணன் திருக்கண் மலர்ந்தார்.  அப்பெருமானின் திருக்கரங்களில் சுடர் வீசும் பாஞ்சஸந்யம் எனப்படும் திருச்சங்கின் அம்சம் அப்போது ஒரு தெய்வக் குழந்தையாக அவதரித்தது.

ஸித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் வளர்பிறையாம் அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்த அந்த தெய்வ குழந்தையின் அதிமதுரக்குரல் கேட்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இன்னிசை பண்ணிசைத்து மகிழ்ந்தனர்.

பொய்கையில் பிறந்ததால் பொய்கையார் என்று திருநாமம் சூட்டினர்.  திருமாலின் சேனைத்லைவன் திருமாலை வழிபடுவதற்குரிய திருவெட்டெழுத்தை முறையோடு அக்குழந்தையின் காதில் ஓதினார். அதனை வைணவர்கள் திரு இலச்சனைப் பெறுதல் என்பார்கள்.

பிறப்பிலேயே திருவெலாம் பெற்று வந்த பொய்கையார் கோகுலத்தில் கண்ணன் வளர்ந்தது போல திருவெஃகாவில் வளர்ந்து வந்தார்.

நடைபயிலும் பருவத்திலேயே அருந்தமிழ்கலையும் வேதபுராணங்களும் கற்றுணர்ந்தார். இருமைக்கும் துணை புரிவது திருமாலுக்குச் செய்யும் திருத்தொண்டு ஒன்றேயாகும் என்பதை நிலையாக நெஞ்சில் பதித்துக் கொண்டார்.அல்லும் பகலும் திருமாலின் அடிமலர் புகழ்ப் பாடிவரும் ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் இவரை பொய்கை ஆழ்வார் என்றே போற்றி பணிந்தனர். பொய்கை ஆழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து பரமனையே கண்டது போல பெருமிதம் அடைந்தனர்.

காஞ்சியில் 18 வைஷ்ணவ ஷேத்திரங்களிலும் மங்களாஸாஸனம் செய்து எம்பெருமானை போற்றினார் பொய்கை ஆழ்வார். அதன் பின்னர் பொய்கை ஆழ்வார் தொண்டை மண்டலத்திலுள்ள திவ்ய ஷேத்திரங்களை தரிசிக்க திருவுள்ளம் கொண்டு பாதயாத்திரை புறப்பட்டார். பற்பல ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே திருக்கோவிலூரை அடைந்தார். அக்கோவிலில்  உள்ள உலகளந்த பெருமானை தரிசிக்க திருவுள்ளம் கொண்டார். அவர் செல்லும் வழியே தென்பெண்ணை ஆறு குறுக்கிட்டது. அதை கண்டதும் விரசை என்னும் பாலாறும் ஸ்ரீமந்நாராயணன் திருத்தோற்றமும் நினைவுக்கு வந்தது. அந்த கணமே பச்சை வண்ண மேனியையும் அவன் கார் குழலையும் கண்டார் பொய்கை ஆழ்வார். அந்த ஒளி பொருந்திய முகத்தில் கருணை மழை பொழியக் கண்டார். அங்கே திருமகளையும் கண்டார். கண்டதும் அவர் கண்கள் ஆனந்த குளமாகியது. அவரை பாடி பாடி பரவசமானார். பரமனை பாடி மகிழ்ந்து மெய்மறந்து நின்றிருந்தபோது இரவாகி போனது நினைவுக்கு வந்து சுய உணர்வு கொண்டு பார்த்த பொய்கை ஆழ்வார் என்ன செய்வது என்று யோசிக்கையில் சூறைக்காற்றும் மழையும் சூழ்ந்து கொண்டது.

அப்போது அவரது கண்ணில் ஒரு ஆசிரமம் கண்ணில் பட்டது.  மனதில் ஆர்வம்  எழும்ப அதை நோக்கி வேகமாக நடந்தார். மிருகண்டு முனிவர் அமைத்திருந்த ஆசிரமம் அது. அங்கே பொய்கையாழ்வார் சென்ற போது கதவு திறந்தே இருந்தது. யாரும் உள்ளே இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. பொய்கையிழ்வார் மெதுவாக உள்ளே சென்றார்.
நடு இரவு...வெளியில் கொட்டும் மழை... இனி போவதற்கு வழியில்லை.....இங்கே ஓரிடத்தில் சாய்ந்து துயில் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கதவை தாழிட்டுக் கொண்டு வந்து, சோர்வு யாவும் நீங்க நெட்டி முறித்து காலை நீட்டிக் கொண்டு பரந்தாமா என்று கூறியபடியே படுத்து சற்று கண் அயர்ந்தார்.

நிற்க இந்த இடத்தில் இரண்டாம் ஆழ்வாரான பூதத்தாழ்வரைப் பற்றி சிறிது பகிர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment