Friday 25 May 2012

திருமழிசை ஆழ்வார் வைபவம் - 1


மகிசாரக்ஷேத்ரம் என்னும் பெயருடைய திருத்தலம் திருமழிசையாகும். இறைவளமும் இசைவளமும் ஒருங்கே நிரம்பப்பெற்ற திருத்தலம் திருமழிசையாகும்.  திருமழிசை கோவிலில் எப்போதும் வேதம் ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தணர்கள் அக்கோவிலைச் சுற்றி குடியிருந்தனர். அத்திருத்தலத்தின் தபோவனத்தில் முனிவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் பார்கவ முனிவரும் அவரது மனைவி கனகாங்கியும் வாழ்ந்து வந்தார்கள்.  அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற கவலையும் இருந்தது.  இருவரும் இல்லத்தில் இருந்துக் கொண்டே வானப்ரஸ்தத்தை அடைவதற்கான வழிகளை கடைப்பிடித்தனர். அப்போது பார்கவ முனிவரும் மற்ற முனிவர்களோடு சேர்ந்து தீர்க்கசத்திர யாகம் நடத்தி வந்தார். அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள்.  ஆனால் அவரது மனைவிக்கோ பத்து மாதமாகியும் குழந்தையும் பிறக்கவில்லை வலியும் எடுக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்து நின்ற அவர்களை எம்பெருமான் சோதிக்க நினைத்தார்.

 
சித்தார்த்தி ஆண்டு தை மாதம் கிருஷ்ணபட்சம் ப்ரதமை திதி ஞாயிற்றுக்கிழமை மகம் நக்ஷத்திரத்தில் திருமாலின் திருக்கரங்களிலே ஒளிவிடும் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக கனகாங்கி வயிற்றில் இருந்து அங்கங்களே இல்லாத ஒரு ஜீவன் பிறந்தது. பிள்ளைக்காக ஏங்கி தவித்த எங்களுக்கு இப்படி உருவமே இல்லாத பிள்ளை பிறந்ததே நாங்கள் என்ன தவறு செய்தோம். யாகம் செய்தும் பலனில்லையே என எண்ணிக் கலங்கினர். இனி துன்பப்பட்டு ப்ரயோஜனம் இல்லை குழந்தை பாசத்தில் உழன்றால் பகவத் கைங்கர்யத்திற்கு தடை ஏற்படும் என்பதற்காக தான் பரமன் இப்படி ஒரு ஜீவனை கொடுத்தார் என்று நினைத்த வண்ணம் அப்பிண்டத்தை கையிலேந்திக் கொண்டு ஊருக்கு வெளியில் உள்ள பிரம்பு புதருக்கு அருகில் சென்றனர்.  கொண்டு வந்த பிண்டத்தை பார்த்து கலங்கினர். இனி வருந்த கூடாது என்றெண்ணி கொண்டு வந்த தூய மெல்லிய ஆடையை மெத்தென்று மடித்து புதரின் கீழ் வைத்து அதன் மேல் அப்பிண்டக் குழந்தையை வைத்தார். அதை விட்டு பிரிய மனமின்றி அதையே சிறுது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர். எத்தனை நேரம் பார்த்தாலும் இந்த பிண்டம் குழந்தையாக போவதில்லை என்று நினைத்துக் கொண்டே மனைவியை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முனிவர்.

அப்போது திருமால் பிராட்டியாருடன் பிரம்பு புதரில் எழுந்தருளி உறுப்புகள் இல்லாத ஜீவன் திருக்கண் மலர அனுக்கிரகம் செய்தார்.  பிராட்டியாரும் அருள் பாலித்தார்.  திருமால் கடாட்சமும் திருமகள் கடாட்சமும் பெற்ற அந்த ஜீவன் தங்கம் என ஜொலித்தது. பேரொளி பொங்கும் திருவருட்செல்வமாக கை-கால்களை அசைத்து குவா-குவா என்று கேட்பவர்கள் நெஞ்சம் துடிக்கும் அளவுக்கு அழுதது. பிரம்பைக் கொண்டு பல தொழில் செய்து பிழைக்கும் திருவாளன் என்பவன் அந்த சமயம் அங்கு வந்தான்.  பிரம்பறுக்க வந்தவன் பேரொளி பொங்கும் அந்த குழந்தையை கண்டான். அது தெய்வக் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று நினைத்தான். தனக்கு பிள்ளையில்லா குறை தீர்க்க ஆண்டவனே அக்குழந்தையை கொடுத்திருக்கிறான் என்றெண்ணிய படி அக்குழந்தையை வெள்ளாடையோடு எடுத்துக்கொண்டதும் அக்குழந்தை அழுகையை நிறுத்தியது.

தனக்கு கிடைத்த பொக்கிஷம் என நினைத்து அக்குழந்தையை வீட்டுக்கு கொண்டு சென்று தன் மனைவி பங்கஜவல்லியிடம் கொடுத்தான். தாயன்போடு வாங்கி உச்சி மோர்ந்து முத்தமிட்டாள்.  மறுகணமே தாயன்பு மிகுதியால் அவளுக்கு மார்பில் பால் சுரந்துவிட்டது. அந்த குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி பாலை குடுக்க தொடங்கிய போது அக்குழந்தை பாலை குடிக்க மறுத்து விட்டது.  தாய்ப்பாலையோ தண்ணீரையோ பழத்தையோ உண்ணாமல் சொர்ணவிக்ரஹம் போல் சயனித்து இருந்தது. அக்குழந்தையின் இந்த செயல் புரியாத அவர்கள் கடவுளை பிரார்த்தித்தனர். அதிசயமான அந்த குழந்தையை பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அதை பார்க்க வருகை தந்தநர்.அக்குழந்தையால் திருமழிசைக்கே ஒரு பொற்காலம் வந்தது போல் நினைத்து மகிழ்ந்தனர். ஒரு நாள் அக்குழந்தையை பார்க்க ஒரு வயதானவர் தன் மனைவியோடு வந்தார். இருவருமே திருமால் அடிமைகள். பல ஆண்டுகளாகியும் குழந்தை செல்வம் இல்லாத குறையோடு இருந்தனர். இந்த அதிசய குழந்தையை பற்றி கேள்விப்பட்டு அதை பார்க்க வந்தனர். அதற்கு கொடுப்பதற்காக மதுரமான பால் கொண்டு வந்திருந்தனர். அதை பார்த்த பங்கஜவல்லி 'ஐயா! இக்குழந்தை இதுவரை எதையும் உண்டதில்லை" என்று சொன்னாள். ஆனால் அவர்களோ வெள்ளிக்கிண்ணத்தில் பாலை எடுத்து "திருமாலின் திருஅவதரமாக திருமழிசையில் அவதரித்துள்ள அருட்செல்வமே எங்கள் மனக்குறை நீங்க பாலை பருகி மகிழ வேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பாலை புகட்டவும் குழந்தை புன்முறுவல் பூத்த வண்ணம் பாலை பருகிவிட்டது. அதை கண்டு அனைவரும் ஆச்சர்யமுற்றனர். "என்ன தவப்பயனோ தாங்கள் கொடுத்த பாலை பருகி விட்டது இக்குழந்தை. தாங்கள் எங்கள் மீது கருணைக் கொண்டு நாள்தோறும் வந்து பால் கொடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்" என்றனர் திருவாளனும் பங்கஜவல்லியும். அதன்படியே தினமும் வந்து பால் புகட்டிச் சென்றனர் தம்பதியர்.

1 comment: